Close

C.M. Trophy District level -Meeting

Publish Date : 16/08/2024
.

செ.வெ.எண்:-40/2024

நாள்:-13.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, தொடர்பாக மாவட்ட அளவிலான மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(13.08.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் மாவட்ட, மண்டலம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் CM Trophy 2024 – Online Registration- Player Login – இல் 25.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும். இணையதளம் வாயிலாக பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள இயலும். நேரடியாக போட்டிகளில் கலந்துகொள்ள இயலாது. போட்டிகள் குறித்த விபரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவின்போது கோரப்பட்டுள்ள ஆவணங்களுடன் வங்கி புத்தக நகல் கட்டாயம் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 முதல் 19 வயது வரை) மாவட்ட அளவில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி , கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துப்பந்து, கைப்பந்து, கேரம், செஸ் மற்றும் கோ-கோ ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகள் (17 முதல் 25 வயது வரை) மாவட்டம் அளவில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துப்பந்து, கைப்பந்து, கேரம் மற்றும் செஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள், தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் ஒருவர் 2 பிரிவுகளில் கலந்து கொள்ளலாம், குழு விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் ஏதேனும் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது, தங்கள் பள்ளி அல்லது கல்லுாரி உண்மைத்தன்மை சான்று(Bonafide certificate)/ அடையாணஅட்டை(ID card) பதிவேற்றம் செய்திட வேண்டும்.

மாற்றுதிறனாளர்களுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) வயது வரம்பு கிடையாது. மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு(கை, கால் ஊனமுற்றோர்) தடகளம்(100 மீ ஓட்டம், குண்டு எறிதல்), இறகுப்பந்து (ஒற்றையர், இரட்டையர்), சக்கர நாற்காலி மேஜைப்பந்து (ஒற்றையர், இரட்டையர்), பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம்(100 மீ ஓட்டம், குண்டு எறிதல்) கையுந்துப்பந்து(Adapted Volleyball) (7 நபர்கள்), மனவளர்ச்சி குன்றியோருக்கு தடகளம்(100 மீ ஓட்டம், குண்டு எறிதல்), எறிப்பந்து (7 நபர்கள்), செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம்(100 மீ ஓட்டம், குண்டு எறிதல்) கபாடி ( 7 நபர்கள்) என்ற அளவில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

பொதுப்பிரிவினருக்கு மாவட்ட அளவில் மட்டும் (15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள்) தடகளம், கிரிக்கெட், கையுந்துப்பந்து, கால்பந்து, கேரம், சிலம்பம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பொதுப்பிரிவினருக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவு (15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள்) இறகுப்பந்து, கபாடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

பொதுப்பிரிவில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் ஆதார் சான்றிதழ் பெறப்பட்டுள்ள மாவட்டம் சார்பாக மட்டுமே பங்குபெற இயலும். பொதுப்பிரிவில் பங்கேற்பவர்கள் வெளி மாநிலங்களை சார்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்தவராக இருப்பின் அதற்கான இருப்பிடச் சான்று பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவில் மட்டும்(ஆண்கள் மற்றும் பெண்கள்) தடகளம், செஸ், கபாடி, மற்றும் கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இறகுப்பந்து, கேரம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் மாவட்டம் சார்பாக மட்டுமே பங்கு பெற இயலும். அலுவலக அட்டை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்கொள்வார்கள். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையுடன், முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும். தனிநபர் போட்டிகளில் முதல் பரிசாக ரூ.1.00 இலட்வம், இரண்டாம் பரிசாக ரூ.75,000, மூன்றாம் பரிசாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. குழு போட்டிகளில்(தலா) முதல் பரிசாக ரூ.75,000, இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு 30 உறுப்பினர்களைக் கொண்டு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான போட்டிகள் தொடர்பாக அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பொது சிக்னல் பகுதிகளில் வைத்திடவும், போட்டிகள் நடைபெறும் இடங்களில் எவ்வித இடையூம் இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்துவோரை கண்டறிந்து தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான பேனர்கள் முழு விபரங்களுடன் வைத்தல், கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம, விளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்வது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலை, தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் இப்போட்டிகள் தொடர்பான விபரங்களை தெரிவித்து, அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள், இணையதளத்தில் பதிவு செய்து, 15,000 ற்கும் மேற்பட்டோரை போட்டிகளில் கலந்துக்கொள்ள செய்தல், போட்டியில் கலந்துக்கொள்ள இருப்பவர்கள் தங்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்றால் உடனடியாக வங்கிக் கணக்கு திறப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றும் கல்லுாரி கல்வித்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் போட்டிகள் தொடர்பான தகவல்களை தெரிவித்து, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் அலுவலகத்தின் மூலம் இணையதளத்தில் பதிவு செய்திட உதவி செய்து, அவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்திட வேண்டும்.

அனைத்து சுகாதார மற்றும் மருத்துவமனைகளில் முதலமைச்சர் கோப்பைக்கான விளம்பர பேனர்கள் வைத்தல், போட்டிகள் நடைபெறும் நாட்களில் மைதானங்களின் அருகில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகள் இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல் போன்ற பணிகளை மருத்துவத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

அரசு ஊழியர்களை பெருமளவில் போட்டிகளில் பங்கேற்க செய்ய அனைத்து அரசு அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

அனைத்து என்எஸ்எஸ் மாணவர்கள், இளைஞர் மன்றங்கள் மூலம் அந்தந்த கல்லூரிகளில் படிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் ஆன்லைனில் பதிவு மேற்கொள்ளவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்லூரிகள், நேரு இளையோர் மன்றத்தின் கீழ் இயங்கும் இளைஞர் மன்றங்கள், அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அமைந்திருக்கும் மன்றம், விளையாட்டுக் குழுக்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் போட்டிகளுக்கான விளம்பர பலகைகள் வைத்திடல் வேண்டும். போட்டியில் பங்குபெறும் அனைவரும் ஆன்லைனில் பதிவு மேற்கொள்ள உள்ளதால் அதற்கான விழிப்புணர்வு மற்றும் வேண்டிய ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும்.

அனைத்துத் துறை அலுவலர்களும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறுவதற்கும், போட்டிகள் சிறப்பாக நடத்திடவும் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு.சிவா உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.