Close

Church Renovation

Publish Date : 24/07/2025

செ.வெ.எண்:-77/2025

நாள்:-23.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளுவதற்கு அரசு மானியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் மானியத் தொகை பெற தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானியத்தொகை வழங்கிய பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவாலயம் இம்மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.

மேற்படி, திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches), கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet Facilities), குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water Facilities), சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பணிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள் மற்றும் பக்கதர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல் ஆகிய கூடுதல் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவாலய கட்டடத்தின் வயது 10 வருடம் முதல் 15 வருடம் வரை உள்ள கட்டடத்திற்கு ரூ.10.00 இலட்சம், 15 வருடம் முதல் 20 வருடம் வரை உள்ள கட்டடங்களுக்கு ரூ.15.00 இலட்சம், 20 வருடத்திற்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு ரூ.20 இலட்சம் என தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.