Close

Collector Inspection – Kodaikanal Fest – 2025

Publish Date : 01/04/2025
.

செ.வெ.எண்:-80/2025

நாள்:-30.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் கோடை விழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து கொடைக்கானல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா 2025 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(30.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :-

மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் ஆணைப்படியும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் அவர்களின் உத்தரவின்படியும், கொடைக்கானல் கோடை விழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து கள ஆய்வு மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் ஆணைப்படி, கொடைக்கானல் கோடை விழாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு 17 துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து, வாகனம் நிறுத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நகராட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளுடன் சேர்ந்து கோடை விழா 2025 சிறப்பாக நடைபெற முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் 24×7 நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, காவல் துறையின் சார்பில் வழங்கப்படும் QR கோடு மூலம் அவசரம் மற்றும் அவசியம் குறித்து தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும். சுற்றுலா மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த உதவி மையத்தினை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

25 இடங்களில் குடிநீர் ஏடிஎம் மையம் அமைக்கப்படும். சென்ற வருடத்தில் 15 இடங்களில் குடிநீர் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 10 இடங்களில் குடிநீர் ஏடிஎம் மையம் அமைக்கப்படும். மேலும், 25 இடங்களில் ஆர்ஓ(RO) குடிநீர் முறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் புதிய கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளின் வசதிகளுக்காக மொபைல் கழிப்பறை வசதிகளும் தேவைப்படும் இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுடன் கூடுதலான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8.00 மணி முதல் காலை 8.00 மணி வரை சாலைகளில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் விதி மீறல் இருப்பதாக தெரிய வருகிறது. அதனால் கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8.00 மணி முதல் காலை 8.00 மணி வரை தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் ஆணைப்படி, ஏப்ரல் 1-ந் தேதி முதல் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகில் தற்காலிக வாகன நிறுத்துமிடம், அப்பர் லேக் வீவ் (Upper Lake View), ரோஸ் கார்டன், ரோஸ் கார்டன் அருகில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடம், சூரிய வான் ஆய்வகம் (observatory), கொடைக்கானல் நகராட்சி நாய்கள் அறுவை சிகிச்சை மையம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.திருநாவுக்கரசு, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.சத்யநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி மதுமிதா, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.பாபு, உதவி இயக்குநர்(நெடுஞ்சாலைத்துறை) திரு.ராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.