Close

Collector Meeting – (TNPSC)

Publish Date : 13/09/2024
.

செ.வெ.எண்:- 31/2024

நாள்: 12.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்–ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று(12.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 14.09.2024 அன்று நடைபெறவுள்ளது. தேர்வானது காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்கு காலை 08.30 மணிக்குள் வந்து தங்களது வருகை பதிவினை உறுதி செய்திட வேண்டும். தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் 09.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

திண்டுக்கல் வட்டத்தில் 60 தேர்வு கூடங்களில் 16,950 தேர்வர்களும், கொடைக்கானல் வட்டத்தில் 2 தேர்வு கூடங்களில் 369 தேர்வர்களும், பழனி வட்டத்தில் 21 தேர்வு கூடங்களில் 5,374 தேர்வர்கள் என மொத்தம் 83 தேர்வு கூடங்களில் மொத்தம் 22,693 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

அதன்படி, திண்டுக்கல் வட்டத்தில் 19 நடமாடும் குழுக்கள், 5 பறக்கும் படையும், கொடைக்கானல் வட்டத்தில் 1 நடமாடும் குழுக்கள், 1 பறக்கும் படையும், பழனி வட்டத்தில் 7 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளன

அலுவலர்கள் தேர்வு நாளுக்கு முன்னர் அனைத்து தேர்வுக் கூடங்களையும் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். தேர்வு நாளன்று தேர்வுக்கூடங்களை தணிக்கை செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும்.

அனைத்து தேர்வு கூடங்களிலும் தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேர்வர்கள் அறைகள் இருக்கையில் அமர்ந்து தேர்வு எழுதுவதற்கு தேவையான தளவாட பொருட்கள் உள்ளதா என்பதை உறுதி செய்து அறிக்கை செய்ய வேண்டும். தேர்வர்களை நாற்காலியில் அமர வைத்து, தேர்வு அட்டையை பயன்படுத்தி தேர்வு எழுதுவதை தவிர்த்திட அனைத்து முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்களுக்கு பறக்கும் படை அலுவலர்கள் அறிவுறித்திட வேண்டும்.

தேர்வு நாளன்று வினாத்தாள்களை பாதுகாப்பாக தேர்வு கூடங்களுக்கு உரிய நேரத்தில் எடுத்துச்சென்று தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகளை மாவட்ட கருவூலத்தில் நடமாடும் குழு அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும். தேர்வு கூடங்களில் மருத்துவ உதவி வழங்க தேவையான மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தாயர் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தேர்வு முடிவடைந்த பின்னர் விடைத்தாள்களை பெற்று கருவூலத்தில் வைத்து விடைத்தாள் கட்டுகளை தேர்வாணையத்திற்கு அனுப்பும் வரை கருவூலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கருவூல பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு வினாத்தாள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் தேர்வு நடைபெற சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், பழனி சார் ஆட்சியர் திரு.சி.கிசான் குமார்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.கோட்டைக்குமார், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பிரிவு அலுவலர்கள் திரு.பிரபு, திரு.சிவராமகிருஷ்ணன், திரு.தமிழரசன் உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.