DBCMBC – Laundry
செ.வெ.எண்:-41/2025
நாள்:-12.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
நவீன சலவையகம் அமைப்பதற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தபட்ட, சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சலவைத் தொழிலில் முன் அனுபவமுள்ளவர்களுக்கு நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பயனாளிகளின் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் வருமாறு:-
குறைந்தபட்ச வயது 20 ஆக உள்ள 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். குழு உறுப்பினர்கள் பி.வ., மி.பி.வ., (ம) சீ.ம., இனத்தைச் சார்ந்தவராக இருந்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பெற்று பயன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.