DDAWO- TN RIGHTS
செ.வெ.எண்:-85/2025
நாள்: 25.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் – சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுதவிடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விளக்கம் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.
கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் முன்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்புப் பணி ஜீலை 10-ஆம் தேதி துவங்கி வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுப்புப் பணி சிறப்பாக நடைபெற உதவிட வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.