Close

Election- Squad – Seizure and Release

Publish Date : 15/04/2024

செ.வெ.எண்:-24/2024

நாள்:-08.04.2024

திண்டுக்கல் மாவட்டம்

தேர்தல் பறக்கும் படையினரால் ரொக்கபணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என மொத்தம் ரூ.3,31,93,611 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8,77,190 மதிப்பிலான பணம் விடுவிக்கப்பட்டது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம், ரூ.50,000-க்கு மேல் பணம் மற்றும் ரூ.10,000-க்கு மேல் பரிசு பொருட்களையும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் கைப்பற்றிட அறிவுறுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொருட்டு, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும்படை குழுக்கள்(FST), தலா 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள்(SST) மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழுக்கள்(VST) மற்றும் பழனி(கொடைக்கானல்) பகுதிக்கு தலா 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்புக்குழு என மொத்தம் 24 பறக்கும் படைகள், 24 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 8 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பறக்கும் படை குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனைகளில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப்பணம் ரூ.21,96,181 மற்றும் ரூ.3,09,79,550 மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், ரூ.17,880 மதிப்பிலான மது வகைகள் என இன்று(08.04.2024) வரை ரொக்கபணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என்ற வகையில் மொத்தம் 23 இடங்களில் மொத்தம் ரூ.3,31,93,611 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 6 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8,77,190 பணம் விடுவிக்கப்பட்டது.

தேர்தல் தொடர்புடைய புகார்கள் தெரிவிப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைதளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, 1800 599 4785 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 0451-2400162, 0451-2400163, 0451-2400164, 0451-2400165 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், CVigil என்ற பொதுமக்கள் செயலி மூலமும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி சட்டமன்ற தொகுதிக்கு 9600980276, பழனி(கொடைக்கானல்) பகுதிக்கு 04542-290253, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு 04553-241100, ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்கு 7200233818, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 04543-233631, நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு 04544-244452, திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு 9943809442, வேடசந்துார் சட்டமன்ற தொகுதிக்கு 04551-260224 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தேர்தல் தொடர்பான புகார்களை முறையாக பதிவு செய்து, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி நிவர்த்தி செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.