Election Sveep
செ.வெ.எண்:-39/2025
நாள்: 10.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் தங்களது பாகத்தில் உள்ள வாக்காளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் வழங்கி வருகின்றனர்.
மேலும், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று (10.11.2025) 7 சட்ட மன்ற தொகுதிகளிலும் மகளிர் சுய உதவிக்குழுவினர், அரசினர் தொழிற்பயிற்சி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர்களை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு நடை பயண பேரணி நடத்தப்பட்டது. திண்டுக்கல் சட்ட மன்ற தொகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மேற்கண்ட பேரணியில் துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி மு.இராஜேஷ்வரி சுவி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.என்.திருமலை, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.சுரேஷ், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், தனிவட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி) திரு.ஸ்ரீகாந்த் மற்றும் இதர அலுவலர்கள் கலந்துகொண்டனர். நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் பழனி, கொடைக்கானல், குஜிலியம்பாறை ஆகிய இடங்களில் வாக்கு பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர், மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி வாக்கு பதிவு அலுவலர் / வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் மகளிர் சுய உதவிக்குழுவினர், அரசினர் தொழிற்பயிற்சி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.