Kodaikanal Flower Show – Meeting
செ.வெ.எண்:-25/2025
நாள்:-08.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானலில் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுதோறும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 62-வது மலர்க்கண்காட்சி விரைவில் நடத்தப்படவுள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-வது மலர்க்கண்காட்சியை முன்னிட்டு பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் சால்வியா, டெல்பினியம், பிங்ஆஸ்டர், ஆர்னித்தோகேலம், கஜானியா, பென்ஸ்டீமன், வெர்பினா, கொரியாப்சிஸ் போன்ற மலர்ச் செடிகள் கடந்த நவம்பர் மாதம் முதற்கட்டமாக நடவு செய்யப்பட்டது.
மேலும், கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்ட வீரிய ஒட்டு டேலியா மலர் நாற்றுக்கள் மற்றும் ஊட்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் கிழங்குகள், வீரிய ஒட்டு மலர் நாற்றுக்கள் ஆன்டிரைனம், ஃபிளாக்ஸ்பேன்சி, மேரிகோல்டு, கேலண்டுல்லா, ஸ்டேட்டிஸ், டையாந்தஸ், ஜினியா, கலிஃபோர்னியா பாப்பி, இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களாக நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மலர்க்கண்காட்சியில் மயில், புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கொய்யாகனி, செல்பிபாயின்ட், பூனை, பூமரம் போன்ற மலர்களால் ஆன உருவ அமைப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காய், கனிகளால் உருவாக்கப்படும் யானை, மர அணில், கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற ப்ளை கேட்சர், சிறுத்தை, பஞ்சவர்ணகிளி ஆகியவை மலர்க்கண்காட்சியில் வடிவமைக்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ஹ.கோவிந்தராஜ் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.