Close

Mass contact-Ramanathapuram-GP TK

Publish Date : 11/04/2025
.

செ.வெ.எண்:-24/2025

நாள்:-09.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

கோ.ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 158 பயனாளிகளுக்கு ரூ.18.34 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், வெம்பூர்நல்லுார் ஊராட்சி, கோ.ராமநாதபுரத்தில் இன்று(09.04.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 158 பயனாளிகளுக்கு ரூ.18.34 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவற்றை தீர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி, உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற சிறப்பு திட்டங்களை வழிநடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு மாதம் ஒரு கிராமத்திற்கு அனைத்து துறை அலுவலர்களும் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு, மனுக்கள் பெற்று ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மக்கள் தொடர்பு முகாம் இங்கு இன்றைய தினம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

தமிழ்நாட்டில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 6,200 வீடுகள் கட்டவும், ஊரக குடியிருப்புகள் சீரமைப்புத் திட்டத்தில் 8,000 வீடுகள் சீரமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 3,000 வீடுகள் கட்டப்படவுள்ளது. அதேபோல் பட்டா இல்லாத நபர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கைத்தரத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் பெற்றோர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது, முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு மருந்துகளுக்கு 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

குடிநீர், சாலை வசதி, பட்டா என பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகமும், அனைத்துத் துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த மக்கள்தொடர்பு முகாமில் 187 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அரங்குகளை பார்வையிட்டு, அரசின் திட்டங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். அரசின் திட்டங்கள் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இன்றைய முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூ.7.04 இலட்சம் மதிப்பீட்டிலும், வருவாய்த்துறை(சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.1.17 இலட்சம் மதிப்பீட்டிலும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 31 பயனாளிகளுக்கும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.18,700 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்க ரூ.10,000 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வழ்வாதார இயக்கம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13,400 மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறை- வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.8.20 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 158 பயனாளிகளுக்கு ரூ.18.34 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், உதவி இயக்குனர்(நிலம்) திரு.சிவக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, தனித் துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, தாட்கோ மேலாளர் திருமதி கோ.முத்துச்செல்வி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், கூட்டுறவு துணைப்பதிவாளர் திரு.அன்பரசன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம், குஜிலியம்பாறை வட்டாட்சியர் திரு.ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

 .

.
.
.

.

.

.