Close

Mass contact – Sengurichi

Publish Date : 12/06/2025
.

செ.வெ.எண்:-31/2025

நாள்:-11.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

செங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 200 பயனாளிகளுக்கு ரூ.77.30 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், செங்குறிச்சி கிராமத்தில் இன்று(11.06.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 200 பயனாளிகளுக்கு ரூ.77.30 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அரசின் நலத்திட்ட உதவிகள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். கல்வி, சுகாதாரம், வேளாண்மை என அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

மக்களைத் தேடிச் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்காகவும், பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவற்றை தீர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி, உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு மாதம் ஒரு கிராமத்திற்கு அனைத்து துறை அலுவலர்களும் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு, மனுக்கள் பெற்று ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மக்கள் தொடர்பு முகாம் இங்கு இன்றைய தினம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

குடும்ப பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் சுமார் 6,800 வீடுகள் கட்டவும், ஊரக குடியிருப்புகள் சீரமைப்புத் திட்டத்தில் சுமார் 8,000 வீடுகள் சீரமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 4,000 வீடுகள் கட்டப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 15,000 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. அதில் சுமார் 1.50 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.3,600 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளிப்படிப்பை முடித்த அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக உயர்வுக்கு படி, கல்லுாரிக் கனவு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அரங்குகளை பார்வையிட்டு, அரசின் திட்டங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். அரசின் திட்டங்கள் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இன்றைய முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ.6.60 இலட்சம் மதிப்பீட்டிலும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை(சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 50 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.96,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3,612 மதிப்பீட்டிலும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.8,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்6 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.63.00 இலட்சம் மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.52,600 மதிப்பீட்டிலும், என மொத்தம் 200 பயனாளிகளுக்கு ரூ.77.30 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு சீருடைகள், துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில், உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், தனித் துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.