Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-19/2025
நாள்:-07.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு சுமார் ரூ.88,000/- ஊக்கத் தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(07.04.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 378 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றையக் கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) பகுதி-II திடக்கழிவு மேலாண்மை திட்டம், கிராம ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள் மூலம் வீடுவீடாக சென்று குப்பை சேகரித்து மக்கும் குப்பைகளை உரமாக்குதல், மக்காத மறுசுழற்சி செய்யதக்க குப்பைகளை நேரடியாக விற்பனை செய்தல், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கவர்களை, நெகிழி கழிவு மேலாண்மை அலகுகளுக்கு விற்பனை செய்தல், பிளாஸ்டிக் பைகளை அரைத்து தார் சாலை அமைக்க விற்பனை செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கிடைக்கும் வருவாயினை தூய்மை காவலர்களுக்கு ஊக்கத் தொகையாக அந்தந்த கிராம ஊராட்சிகளில் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 துாய்மை காவலர்களுக்கு ரூ.28,000 மதிப்பிலும், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 5 துாய்மை காவலர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலும், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 11 துாய்மை காவலர்களுக்கு ரூ.25,000 மதிப்பிலும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 5 துாய்மை காவலர்களுக்கு ரூ.25,000 மதிப்பிலும் என மொத்தம் 33 தூய்மை காவலர்களுக்கு சுமார் ரூ.88,000 மதிப்பிலான ஊக்கத் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.3,000 மதிப்பிலான காதொலி கருவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், வெப்பம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, உதவி ஆணையாளர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.


.
.