Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-14/2025
நாள்:-04.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(04.08.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 550 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு ரூ.1.00 இலட்சம் நிவாரணம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார வணிக மேம்பாட்டு நிதி 6 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டிலும், சிறுதானிய தொழில்முனைவோர் கடன் ஒரு பயனாளிக்கு ரூ.1.00 இலட்சம் கடனுதவி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவி ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள் ஆகியோரை அதிகளவில் பங்கேற்கச் செய்யும் வகையில் இணையதளம்(https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in ) வாயிலாக பெயர்ப் பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு கியூஆர் கோடு வழிமுறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில் ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு.சிவா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.