Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-28/2025
நாள்:-13.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.10.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 226 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6,690/- மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.26,760/- மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.3,285/- மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.16,425/- மதிப்பீட்டிலான காது கேட்கும் கருவிகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.15,750/- மதிப்பீட்டில் என மொத்தம் .31,500/- மதிப்பீட்டிலான சக்கர நாற்காலிகளையும், 6 பயனாளிகளுக்கு ரூ.2,85,000/- மதிப்பீட்டிலான மாற்றுத்திறனாளிகள் இறப்பிற்கான (விபத்து மற்றும் இயற்கை மரணம்) நலவாரிய உதவித்தொகையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.மகாலிங்கம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் நல அலுவலர் திரு.க.சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.