MVM College – Meeting
செ.வெ.எண்:-117/2025
நாள்:-30.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுகப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுகப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(30.06.2025) தொடங்கி வைத்து, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் அனைவரையும் ஏதாவது ஒரு உயர்கல்வியில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கல்வி என்பது தனி மனிதன் மற்றும் இந்த சமூகத்திற்கு அடித்தளம். நாட்டின் முன்னேற்றத்திற்கும், தனிமனிதன் வளர்ச்சிக்கும் கல்வி முக்கியமானது. பெண்கள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வில் சேரும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கிவிக்கும் வகையில் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் அவர்களின் குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றிட பெரிதும் உதவிகரமாக உள்ளது. மாணவ, மாணவிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் தங்களது பெற்றோர்களிடமிருந்து பண உதவிகள் பெறாமல் இந்த உதவித்தொகை மூலம் கல்விக்கான சிறிய தேவைகளை பூர்த்தி செய்து பயன் பெறலாம்.
கல்லூரி வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. கல்லூரி என்பது கல்வியை மட்டுமின்றி வாழ்க்கை பாடத்தையும் நமக்கு கற்பிக்கிறது. இந்த கல்லூரி காலத்தில் நல்ல விஷயங்களை அறிந்து நமது வாழ்க்கையில் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தீய விஷயங்களை அறிந்து அவற்றை ஒதுக்கிட வேண்டும்.
மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையிலே இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேரும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு வார காலம் அறிமுக பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கல்வித் துறையில் உள்ள அம்சங்கள், கல்வி உதவித்தொகைகள், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், வேலைவாய்ப்புகள், கல்வி, சட்டம், சுகாதாரம், சைபர்கிரைம், தலைமைப்பண்புகள் போன்ற போன்ற தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. கல்விக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், கல்லூரியில் உள்ள வசதிகள் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகள் பொறுப்புணர்வுடன் நடந்து சமூக பங்களிப்பை செய்வதற்கான அனைத்து தகுதிகளையும் பெற வேண்டும். தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் இதுபோன்ற கல்வி மேம்பாட்டு திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
முன்னதாக முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கி கல்லூரி முதல்வர் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் க.லட்சுமி, இணைப்பேராசிரியர்கள் முனைவர் நாகநந்தினி, முனைவர் ராஜேஸ்வரி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.