Close

PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India – (PM YASASVI )

Publish Date : 16/10/2024

செ.வெ.எண்:-33/2024

நாள்:-14.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2024–25 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள். 15.10.2024. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள். 31.10.2024.

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) புதுப்பித்தல் (Renewal Application) என்ற இணைப்பில் (Link) சென்று ஒருமுறை பதிவு (OTR Number (One Time Registration) செய்து 2024 -25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்தல் மேற்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் முறையே 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவிதொகையானது வழங்கப்படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் ஒருமுறை பதிவு(OTR Number) மற்றும் கடவுச்சொல்(Password) பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும். பின்னர் ஒருமுறை பதிவு எண்ணை (OTR Number) பயன்படுத்தி 2024 -25 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal ( https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.