Close

Special Photo Exhibition – Palani

Publish Date : 13/02/2025
.

செ.வெ.எண்:-24/2025

நாள்: 12.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

பழனி அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பழனியில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு, பழனி கிரிவலப்பாதை அடிவாரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பக்தர்கள் இன்று(12.02.2025) பார்வையிட்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், அமைக்கப்பட்ட இக்கண்காட்சியில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவ திட்டம், காலை உணவுத்திட்டம், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம், அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள ”விடியல் பயணத் திட்டம்”, அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன் திட்டம்”, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ‘மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்”, ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் ”கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்”, உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மதிப்பிற்குரிய பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற ஆகியோர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்று, பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்த அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான புகைப்படங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பக்தர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.