Close

TABCEDCO Loan

Publish Date : 02/07/2024

செ.வெ.எண்:-63/2024

நாள்:-28.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கடனுதவிகளை பெற, விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7 சதவீதம் மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை 8 சதவீதம் ஆகும்.

குழுக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில், வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருபாலருக்கான சுய உதவிக் குழு (Mixed Self Help Group) உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம் ஆகும்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கோரும் ஆவணங்களின் நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.