TAMCO – Loan
செ.வெ.எண்:-67/2025
நாள்:-21.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்(TAMCO) மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டிவிகிதங்களின் மாறுபட்ட அளவுடன்கூடிய திட்டம் 1 மற்றும் திட்டம் 2 ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.8,00,000/-வரை இருக்க வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ், தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டிவிகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/ம், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டிவிகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டிவிகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/-கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டிவிகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ், ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதம் வட்டிவிகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுநிலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீதம் வட்டிவிகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம் மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டிவிகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி பயன்பெறலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
தனிநபர் கடன் திட்டம், சுயஉதவிகுழுக் கடன், விராசத்(கைவினை கலைஞர் கடன் திட்டம்) கடன் விண்ணப்பங்களுடன், சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், உணவு பங்கீடுஅட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை, வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
கல்விக் கடன் விண்ணப்பங்களுடன், சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், குடும்ப அட்டை / வாழ்விடசான்று (Smart card), ஆதார் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், உண்மைச்சான்றிதழ் (Bonafide Certificate) அசல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது- அசல் (Original), மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கோரும் இதர ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.