Close

Tamilvalarchi Competition

Publish Date : 14/10/2024

செ.வெ.எண்: 24/2024

நாள்:-10.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் மற்றும் மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி தனித்தனியே நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் மற்றும் அக்டோபர் 2ஆம் நாள் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி 16.10.2024 அன்றும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 17.10.2024 அன்றும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 18.10.2024 அன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் தனித்தனியே நடைபெற உள்ளன.

மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 என்ற வகைப்பாட்டில் வழங்கப்பட உள்ளது. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2,000 வீதமும் வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் (ஒரு பள்ளிக்கு ஒருவர், ஒரு கல்லூரிக்கு இருவர்) இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் இடம், நேரம், தலைப்பு, விதிமுறைகள் ஆகியவை பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அல்லது கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளித்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி (எண் 0451-2461585) வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.