Close

Tamilvalarchi competition

Publish Date : 25/06/2025

செ.வெ.எண்:-93/2025

நாள்:-25.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை(ஏப்-14) முன்னிட்டு 30.06.2025 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை(சூன்-3) முன்னிட்டு 01.07.2025 அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வறிவிப்பின்படி 2025-2026-ஆம் நிதியாண்டில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்(ஏப்ரல்-14) முன்னிட்டு பேச்சுப்போட்டி 30.06.2025(திங்கள்கிழமை) அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்(சூன்-3) முன்னிட்டு பேச்சுப்போட்டி 01.07.2025 (செவ்வாய்க்கிழமை) அன்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் (6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை) பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக உரிய வழிமுறைகளை பின்பற்றி பள்ளி மாணவர்களுக்கு காலை 10.00 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2.00 மணி முதலும் நடைபெறவுள்ளன.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 30.06.25 அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு “ 1)சட்டமேதை அம்பேத்கர், 2) அம்பேத்கரின் சமூக சிந்தனைகள், 3) அம்பேத்கரும் பௌத்த மத ஈடுபாடும் ஆகிய தலைப்புகளிலும், அதேநாள் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப் போட்டிக்கு “1) அம்பேத்கரும் காந்தியடிகளும், 2) அரசியலமைப்புச் சட்டம் தந்த அம்பேத்கர், 3) அம்பேத்கர் என்னும் ஆளுமை” ஆகிய தலைமைப்புகளில் போட்டி நடத்தப்படும்.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி 01.07.25 அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு “1) கலைஞரின் கல்வி நலத் திட்டங்கள், 2)பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், 3) முத்தமிழறிஞர் கலைஞர்” எனும் தலைப்புகளிலும், அதே நாள் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டிக்கு “1)கலைஞரின் படைப்புகள் , 2) செம்மொழி நாயகர் கலைஞர், 3) கலைஞரின் குறளோவியம் ” ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்படும்.

மாவட்டங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் செயல்படும் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு முதல் சுற்றுப் பேச்சுப்போட்டியினை அப்பள்ளிகளிலேயே / கல்லூரிகளிலேயே நடுவர் உட்பட அவர்களாலேயே தெரிவு செய்து போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தப்பெற்று வெற்றி பெற்ற இரண்டு மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் வாலாயமாகத் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தவிரப் பிற பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தலைமையாசிரியர் மற்றும் முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

கல்லூரி பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இதுதவிர ஒவ்வொரு போட்டியிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000/- வீதம் வழங்கப்படும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.