Close

Tamilvalarchi-Tamil scholars

Publish Date : 12/10/2024

செ.வெ.எண்:-18/2024

நாள்:-08.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தமிழ் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

முதுமைக் காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த்தொண்டர் பெருமக்களைத் தாக்கா வண்ணம் மாதம்தோறும் ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.4,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்து வரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமை மேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 என அத்திருத்தொண்டு தொடர்கிறது. தமிழாய்ந்த தமிழ் மகனின் தமிழரசு தமிழ்த்தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1334 அகவை முதிர்ந்ததமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2024-25-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதிகள்:

01.01.2024 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச்சான்று இணைக்கப்பட வேண்டும்). தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக்குறிப்பு. தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன்/ மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை, சமூக நல பாதுகாப்பு உதவித் தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்கள் வாயிலாக உதவித் தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தினை மண்டல/மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை/உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர் பெருமக்கள், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.10.2024-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.