Close

Textile scheme – Notification

Publish Date : 21/10/2024

செ.வெ.எண்: 52/2024

நாள்: 19.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

துணிநூல் துறை மேற்கொண்டு வரும் ஜவுளித்துறை தொடர்பான புத்தாக்க முயற்சிகளை தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களுடன் ஜவுளித்துறை, மாநில பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பினை வழங்குவதோடு, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ஜவுளிதுறையின் நலனை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் இருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக துணிநூல் துறை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதுள்ள நலத்திட்டங்களை வலுப்படுத்துவதும், தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு தரப்பினரும் பயன்பெறும் வகையில் புத்தாக்க முயற்சிகளுக்கு வித்திடுவதும் துணிநூல் துறையின் நோக்கமாகும்.

ஜவுளித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், தொழில்துறை மற்றும் கல்வித்துறைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகிய முன்னெடுப்புகளின் மூலம் ஜவுளிதுறையில் புதுமையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள துணிநூல் துறை ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு தொடரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் ஜவுளி தொழிலின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக திறன் மிக்க பணியாளர்களை உருவாக்கவும், தொழில் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் மற்றும் தொழில் சங்கங்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கவும், ஜவுளிதுறையினர் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களிடையே தொழில்நுட்ப ஜவுளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் துணிநூல் துறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

ஜவுளி பொருட்களுக்கான சந்தைகளை விரிவுபடுத்தும் பொருட்டு பன்னாட்டு வணிக கூட்டாண்மைகளை ஆராய்தல், வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்றல் மற்றும் மண்டல வாரியாக ஜவுளி நுட்பங்களை வெளிப்படுத்த டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை துணிநூல் துறை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

துணிநூல் துறை மாநிலத்தில் முக்கிய ஜவுளி குழுமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு மண்டல அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது.

இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளி தொழில்முனைவோர், தொழிலாளர்கள், ஜவுளித்துறை மற்றும் அதன் முயற்சிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, அறை எண். 502, ஐந்தாம் தளம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 0421 – 2220095 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.