The Hon’ble CM -VC-Food and Civil Supply minister-Break Fast Scheme
செ.வெ.எண்:-100/2025
நாள்:-26.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அனைத்து நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை சென்னை மயிலப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் இன்று(26.08.2025) தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஆர்.சி லயோலா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அனைத்து நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை சென்னை மயிலப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் இன்று(26.08.2025) தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஆர்.சி லயோலா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற 51 மாத காலத்தில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, சொல்லாத எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்து மாணவர்களும் எந்த காரணத்தை கொண்டும் கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதில் தமிழக அரசு மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதாலும், பெற்றோர்கள் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதாலும், சிலருடைய குடும்ப சூழலும் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவினை முறையாக சாப்பிடுவதில்லை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சூழ்நிலை காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வயிற்றுப்பசியை நீக்க இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள்.
பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வாரம் 5 முட்டைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் செயல்படுத்தும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25.08.2023 அன்று திருக்குவளையில் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைதொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அனைத்து நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை சென்னை மயிலப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் இன்று(26.08.2025) தொடங்கி வைத்துள்ளார்கள். சுமார் 20 இலட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் காலை உணவு திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.
இந்தாண்டு சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (25.08.2025) 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் Electrirican, Surveyor, Refrigeration And Air Conditioning Technician மற்றும் Computer Hardware And Network Maintenance ஆகிய தொழிற்பயிற்சி படிப்பதற்காக விருப்பாட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தொழிற்பயிற்சி மையம் கட்டப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள்.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு கடந்த 58 மாத ஆட்சியில் சுமார் ரூ.320 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை) தொடங்கி வைத்துள்ளார்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக 25.08.2023 முதல் தொப்பம்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட, 170 அரசு துவக்கப்பள்ளிகளில், 1முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 4985 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. 15.07.2024 முதல், திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் செயல்படும் 15 அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 698 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இன்று(26.08.2025) முதல், திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படும் 4 அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளிகளில், 1முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 548 மாணவ, மாணவிகளுக்க தற்போது காலை சிற்றுண்டி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஆக மொத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 189 பள்ளிகளில் 6,231 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் 19 அரசு பள்ளிகளில் 1,284 மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர் மேலும், அரசு உதவி பெறும் 16 பள்ளிகளில் 2,631 மாணவ, மாணவிகள் கலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனவே. மாணவர்கள் நல்ல முறையில் படித்து பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும், சமுதாயத்திற்கம் பெருமை சேர்த்திடும் வகையில் கல்வி வளர்ச்சியில் வளர வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.கண்ணன். ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி சுவேதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு.முத்துப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.