The Hon’ble Food and Civil Supply Minister (Oddanchatram -Bus)
செ.வெ.எண்:-45/2025
நாள்:-12.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 9 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 9 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை இன்று (12.05.2025) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், பேருந்துகள் இயக்கத்தை அரசுடைமையாக்கப்பட்டது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான். மேலும், 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்தினை மேம்படுத்திடவும், பொதுமக்கள் பேருந்து பயணத்தினை அதிகம் பயன்படுத்தவும், சாலை போக்குவரத்தினை மேம்படுத்திடவும், பாதுகாப்பான சூழ்நிலையில் பயணம் செய்வதற்காகவும் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கியுள்ளார்கள்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரம் போக்குவரத்துக் கிளை சார்பில் புதிய மலைப்பகுதிக்கான பேருந்து ஒட்டன்சத்திரம் – பாச்சலுார் – கேசி பட்டி (வழி-வடகாடு, கண்ணனுார், பாச்சலுார்), புதிய நகரப்பேருந்துகள் ஒட்டன்சத்திரம் – பொருளூர் (வழி-அம்பிளிக்கை, கப்பல்பட்டி, பொட்டிக்காம்பட்டி, தேவத்தூர், கொத்தையம்), பழனி – கொத்தையம் (வழி- மாட்டுப்பாதை, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, தேவத்தூர்) மற்றும் ஒட்டன்சத்திரம் – பழனி (வழி-விருப்பாட்சி, சத்திரப்பட்டி, மாட்டுப்பாதை, கண்க்கன்பட்டி) ஆகிய வழித்தடங்களிலும், பழனி போக்குவரத்துக் கிளை சார்பில் பழனி- வேப்பன்வலசு(வழி – டி.கே.என்.புதூர், ரூக்குவார்பட்டி, அமரபூண்டி), பழனி –தீத்தாகவுண்டன்வலசு(வழி – அமரபூண்டி, ரூக்குவார்பட்டி, வேப்பன்வலசு, ஜே ஆர்சி பள்ளி), பழனி – தொப்பம்பட்டி(வழி- வண்ணாபட்டி, வில்வாதம்பட்டி, ஆலாவலசு, சரவணம்பட்டி), பழனி – பூசாரிகவுண்டன் வலசு( வழி -ஆலாவலசு, சரவணம்பட்டி, தொப்பம்பட்டி) மற்றும் நத்தம் போக்குவரத்துக் கிளை சார்பில் நத்தம் – சிலுவத்துார்(வழி – உலுப்பக்குடி, கோபால்பட்டி, வி.குரும்பப்பட்டி, மருநுாத்து, வி.மேட்டுப்பட்டி, அதிகாரிப்பட்டி) என 9 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள் இயக்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆகமொத்தம் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
நான் முதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற 55 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 48 மாதங்களில் 2,600 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 260 கடைகள் பிரிக்கப்பட்டு, புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 86 புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டதில், இதுவரை 1.70 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோருக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1400 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் மாணவிகளுக்கான விடுதி அமைக்கப்படவுள்ளது. அதில் ஒன்று ஒட்டன்சத்திரத்தில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கேதையறும்பு மற்றும் ஒட்டன்சத்திரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரத்தில் 450 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு, கீரனுார் 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு பொருளாதாரத்தில் 9.69 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக உள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திரு.திருமலைச்சாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் திரு.ஏ.முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.