Close

The Hon’ble Food and Civil Supply Minister – Scheme Meeting

Publish Date : 18/06/2024
.

செ.வெ.எண்:-26/2024

நாள்: 13.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிப்பட்டியில் இன்று(13.06.2024) ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

பொதுவிநியோகத் திட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடிமைப்பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக நியாயவிலைக்கடைகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதற்கு பயோமெட்ரிக் முறை அமைக்கப்பட்டு விட்டது. இந்த முறையில் கைரேகை பதிவு மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதால் கண்கருவிழி பதிவு மூலம் பதிவுகள் மேற்கொண்டு பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தமிழகத்தில் 35,000 நியாயவிலைக்கடைகளுக்கும் கண்கருவிழி பதிவு கருவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 102 நியாயவிலைக் கடைகளுக்கான கண் கருவிழி பதிவு கருவிகளை விற்பனையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில், நாமக்குநாமே திட்டம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். ஒட்டன்சத்திரம் தொகுதி மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மனுவாக அளிக்கும்பட்சத்தில், அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு, நிதி ஒதுக்கீடு பெற்று வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றப்படும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி அவற்ற செயல்படுத்த துறை அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். தற்போது, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மண் அள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வட்டாட்சியர் மூலம் அனுமதி பெற்று மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்“ என்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வாக்குப்படி, மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். சிறிய ஊராட்சிகளில் குறைந்தது 5000 மரக்கன்றுகள், பெரிய ஊராட்சிகளில் 10,000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் 15.75 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 2 இலட்சம் குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.

பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும் விடியல் பயணத்திட்டத்தில் இதுவரை 440 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

பெண்கள் உயர் கல்வி படிப்பதை உறுதி செய்யும் வகையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தற்போது மாணவர்களுக்கும் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் ஆண்கள் 6 முதல் 12 –ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு சென்றால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தில் 31,000 பள்ளிகளைச் சேர்ந்த 17.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திருமதி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள் திரு.பி.சி.தங்கம், திருமதி காயத்ரி தேவி, ஒட்டன்சத்திரம் நகராட்சித் துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அனுசுயா, இணை இயக்குநர்(நலப்பணிகள்) மரு.பூமிநாதன், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம், உதவி ஆணையர்(கலால்) திரு.பால்பாண்டி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, குடிநீர் வடிகால் வாரிய கொறியியல் இயக்குநர் திரு.கே.நடராஜன், தலைமைப் பொறியாளர்(மதுரை) திரு.வி.ஆறுமுகம், மேற்பார்வை பொறியாளர்(மதுரை) திரு.ஜி.டி.முரளிமனோகர், நிர்வாகப்பொறியாளர்கள் திருமதி லலிதா, திரு.ஏ.இராமச்சந்திரன், திரு.பி.மாரியப்பன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.