Close

The Hon’ble Food and Civil Supply Minister – Thoppampatty Union – schemes

Publish Date : 24/07/2024
.

செ.வெ.எண்:-62/2024

நாள்:-23.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.6.06 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(23.07.2024) திறந்து வைத்து, ரூ.6.06 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்களின் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடசந்தூர், திண்டுக்கல், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் தண்ணீரை குழாய் வழியாக கொண்டு செல்லும் திட்டத்திற்காக ரூ.1.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாரப்பன்கவுண்டன் வலசு, மோர்பட்டி, கொழுமங்கொண்டான் ஆகிய பகுதிகளில் வாய்க்கால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சர் அவர்களிடம் அனுமதி பெற்றவுடன் இப்பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு இப்பகுதியில் 141 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களும் எந்த காரணத்தை கொண்டும் கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதில் தமிழக அரசு மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி கற்றிட வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டம் மூலம் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18.50 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர்.

இத்திட்டம் தற்போது, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 3993 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். ஆகமொத்தம் தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டத்தின் மூலம் மொத்தம் 20.73 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வாரம் 5 முட்டைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநிலம், வெளிநாட்டு மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல் கோட்டத்தில் 2 இலட்சம் பயனாளர்களும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 44.65 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1.48 இலட்சம் நபர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் 2009 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேரம் நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தல் 230 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 70 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதிய நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில், தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 16 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு மூலம் பதிவுகள் மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கண் கருவிழி பதிவுகள் மேற்கொள்ள 36,000 நியாயவிலைக் கடைகளிலும் கண்கருவிழி பதிவு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை நவீனப்படுத்தும் வகையில் 7 சங்கங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இன்றையதினம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டத்துறை ஊராட்சி, ஆண்டிநாயக்கன்வலசு பிரிவு, கோவிலம்மாபட்டி ஊராட்சி, நாச்சியப்பகவுண்டன்வலசு பிரிவு, தும்மலப்பட்டி ஊராட்சி, பாறைப்பட்டி பிரிவு ஆகிய இடங்களில் தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகள், நமக்கு நாமே திட்டத்தில் தாளையூத்து ஊராட்சி, பெரியமொட்டனுாத்து கிராமத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மானுார் ஊராட்சியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(23.07.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மேல்கரைப்பட்டி ஊராட்சி, சந்தன்செட்டிவலசு கிராமம், ராஜாம்பட்டி ஊராட்சியில் அத்திமரத்துவலசு மற்றும் ராஜாம்பட்டி கிராமங்கள், புஷ்பத்துார் ஊராட்சி, புஷ்பத்துார் கிராமம் ஆகிய கிராமங்களில் தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கும், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் மானுார் ஊராட்சியில், 54 புதுார் அம்மன் கோவில் முதல் சண்முகாநதி சாலை வரை புதிய தார்ச்சாலை ரூ.3.40 கோடி மதிப்பீட்டிலும், மானுார் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் சம்பக்குளம் இணைப்பு சாலை எதிரில் உள்ள பள்ளி வரை புதிய தார்ச்சாலை ரூ.2.26 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.6.06 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று(23.07.2024) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பொதுமக்கள் என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.