The Hon’ble Food and Civil Supply Minister – UNGALUDAN STALIN CAMP AND BUS INAUGURATION
செ.வெ.எண்:-24/2025
நாள்: 06.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தங்கச்சியம்மாபட்டி, காப்பிளியபட்டி ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்., சார்பில், ஒட்டன்சத்திரம் முதல் கண்ணனூர் வழியாக புலிக்குத்திக்காடு வரை இயக்கப்படும் நகரப் பேருந்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தங்கச்சியம்மாபட்டி, காப்பிளியபட்டி ஊராட்சிப் பகுதிகளில் இன்று (06.11.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, தங்கச்சியம்மாபட்டி பட்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்., சார்பில் ஒட்டன்சத்திரம் முதல் கண்ணனூர் வழியாக புலிக்குத்திக்காடு வரை இயக்கப்படும் நகரப் பேருந்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற நோக்கில் அனைவரும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் வேறு எங்கும் செயல்படுத்தப்படாத “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்தார்கள். பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலுவலர்களை பார்க்க வேண்டுமென்றால் கால தாமதம் ஏற்படும் என்பதற்காகவும், போக்குவரத்து சிரமங்கள் உள்ளிட்ட இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாக கூடாது என்பதற்காகவும், அனைத்து அரசு அலுவலர்களும் உங்கள் வீட்டை தேடி, உங்கள் ஊரை தேடி வருகின்ற திட்டமாகும்.
இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வந்துள்ளார்கள். சுமார் 46 சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நீங்கள் மனுக்கள் கொடுத்தால் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு வழங்கி உள்ளார்.
திண்டுக்கல் மண்டலத்தில் சுமார் 878 பேருந்துகளுடன் 15 கிளைகள், புதுப்பிக்கும் பிரிவு, பயிற்சி மையம் மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய கட்டமைப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருவதோடு அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநில முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேருந்துகள் ”விடியல் பயண திட்டத்திற்காக” இயக்கப்படுகிறது. இந்த விடியல் பயணத்திட்டத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் பயணிக்கும் உதவியாளர் மற்றும் திருநங்கைகள் பயனாளியாக அறிவிக்கப்பட்டு அதன்படி ஒரு நாளைக்கு சுமார் 2.73 லட்சம் பயனாளிகள் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து பேருந்துகளில் பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்திற்கு பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அனைத்து அரசு நகரப்பேருந்துளிலும் பெண்கள் இன்முகத்தோடு பயணிக்கும் நிலையை காண முடிகிறது. மேலும், விடியல் பயணம் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு கொடைக்கானல் மலைவாழ் மக்கள் மகளிர் நலனுக்காக இரண்டு கட்டணமில்லா நகரப்பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், கட்டணமில்லா பேருந்து பயன்பாட்டு சேவையின் மூலம் ஒரு நாளைக்கு 2.75 இலட்சம் பெண்கள் வீதம் மாதத்திற்கு 82 இலட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். அதன்படி, கடந்த 07.05.2021 முதல் 31.10.2025 வரை 38 கோடியே 84 இலட்சத்து 5 ஆயிரத்து 35 மகளிரும், 1 இலட்சத்து 72 ஆயிரத்து 765 மாற்றுத்திறனாளிகளும், 40 இலட்சத்து 51 ஆயிரத்து 29 மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களும், 1 இலட்சத்து 56 ஆயிரத்து 459 திருநங்கைகளும் பயனடைந்துள்ளனர்.
மேலும், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக BSVI புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு திண்டுக்கல் மண்டலத்திற்கு ரூ.141.50 கோடி மதிப்பீட்டிலான 283 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நமது திண்டுக்கல் மண்டலத்திற்கு நகரப்பேருந்துகள் 70, புறநகரப்பேருந்துகள் 139 என மொத்தம் 209 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூண்டு கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. எனவே, வெகுவிரைவில் 209 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் இந்த தருணத்தில் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு மட்டும் 119 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் வருகின்ற 30 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. மேலும், அரவக்குறிச்சி பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் தண்ணீர் சுத்திரிக்கப்பட்டு வருகின்ற 15.11.2025-ஆம் தேதிக்குள் அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 35 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.
மேலும், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் வரும்முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், அதற்கு ஏதுவாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.
தங்கச்சிம்மாபட்டி ஊராட்சியில் இதுவரை 344 பணிகள் ரூ.2151.70 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. காப்பிளியபட்டி ஊராட்சியில் இதுரை 217 பணிகள் ரூ.1345.71 பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, 21 இலட்சம் நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 19 இலட்சம் நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டன்சத்திரம் முதல் புலிக்குத்திக்காடு வழியாக கொடைக்கானல் வரை 1 பேருந்தும், ஒட்டன்சத்திரம் முதல் கண்ணனூர் வரை 5 பேருந்துகளும், ஒட்டன்சத்திரம் முதல் புலிக்குத்திக்காடு வரை 3 பேருந்தும், ஒட்டன்சத்திரம் முதல் புலிக்குத்திக்காடு வழியாக கே.சி பட்டி வரை 5 பேருந்துகளும், ஒட்டன்சத்திரம் முதல் புலிக்குத்திக்காடு வழியாக சோலைக்காடு வரை 1 பேருந்தும், ஒட்டன்சத்திரம் முதல் புலிக்குத்திக்காடு வழியாக வத்தலக்குண்டு வரை 1 பேருந்தும் என மொத்தம் 16 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 5 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளும், 19 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளையும், அமிபிளிகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, Kcc பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 11 நபர்களுக்கு ரூ.10.60 இலட்சம் மதிப்பீட்டிலான பயிர்கடன் கடனுதவிகளையும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, துபாயில் வருகின்ற டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, உலகக் கோப்பை ரோல் பால் போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாட திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் சோளியப்பகவுண்டனூரை சேர்ந்த வீராங்கனை மதுநிதா தேர்வாகியுள்ளதையொட்டி, மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, போட்டியில் வெற்றியடைய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ், போக்குவரத்துத்துறை மண்டல மேலாளர் திரு.முத்துக் கிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் (ஊரக வளர்ச்சித்துறை) திரு.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.