Close

The Hon’ble Food and Civil Supply Minister -Ungaludan Stalin- Odc- Oddaipatty

Publish Date : 15/09/2025
.

செ.வெ.எண்:-52/2025

நாள்: 13.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஓடைப்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் அமைக்கப்பட்டியிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஓடைப்பட்டி ஊராட்சியில் இன்று(13.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் அமைக்கப்பட்டியிருந்து அரங்குகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டங்களில் ஒன்றான “உங்களுடன் ஸ்டாலின்” என்ற முகாம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஓடைப்பட்டி, சிந்தலப்பட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வண்ணமாக இன்று நடைபெறுகிறது.

பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலுவலர்களை பார்க்க வேண்டுமென்றால் கால தாமதம் ஏற்படும் என்பதற்காகவும், போக்குவரத்து சிரமங்கள் உள்ளிட்ட இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாக கூடாது என்பதற்காகவும், அனைத்து அரசு அலுவலர்களும் உங்கள் வீட்டை தேடி, உங்கள் ஊரை தேடி வருகின்ற திட்டமாகும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் அதற்கு பெயர்தான் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமாகும். இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வந்துள்ளார்கள். சுமார் 46 சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நீங்கள் மனுக்கள் கொடுத்தால் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு வழங்கி உள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாட்டில் சுமார் 10,000 ஆயிரம் முகாம்கள் நடைபெற இருக்கிறது. இதுவரை 5,000 முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் சுமார் 18 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள் வழங்கி உள்ளார்கள். அந்த வகையில் மக்களுடைய தேவைகளை நிரைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் ஊரை, உங்கள் வீட்டை தேடி அலுவலர்கள் இங்கு வந்துள்ளார்கள். எனவே, இங்கு மனுக்களை கொடுத்தால் உடனடியாக தீர்வு காணப்படும் மனுக்களுக்கு இன்றே தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளையும் வழங்கப்படும். சில மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தேர்தல் சமயத்தில் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாது சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள். மேலும், நலம் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் ஆகிய திட்டங்கள் தேர்தல் சமயத்தில் சொல்லாத வாக்குறுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்று வருகிறார்கள்.

”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைக்கு இணையாக இம்முகாமில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உயர் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இரத்த பரிசோதனை, சக்கரை, வைட்டமீன் குறைபாடு, இசிஜி ஆகிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். மேல் சிகிச்சை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்கிறது.

மேலும்,கூட்டுறவுத்துறையின் சார்பில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாகனத்தின் மூலம் அவர்களின் வீட்டிற்கே குடிமைப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 3 திட்டங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள்.

மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டதினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொல்லாத திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தினை மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இன்னுயிர் காக்கும் 48 திட்டத்தின்கீழ் அரசு அங்கிகரிக்கப்பட்ட 480 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் 250 ஆகிய 730 மருத்துவமனைகளில் 48 மணி நேரத்திற்கு செலவாகும் மருத்துவ செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் இன்னுயிர் காக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 3 இலட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளார்கள்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.

அதனை தொடர்ந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற முறையை விட இந்த முறை சிறப்பு விதி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.இந்த முகாமில் மனுக்கள் கொடுத்தால் 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

மேலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு 20 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார்கள்.

ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு, மாணவர்கள் படித்துகொண்டு வருகின்றனர்கள்.

விவசாயிகளுக்கு இதுவரை 2 இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சேமித்து வைக்க குளிர் சாதனை கிடங்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டி தரப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய சாலைகளை நெடுஞ்சாலைக்கு ஒப்படைக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் பகுதியில் அனைத்து சாலைகளையும் நெடுஞ்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், அந்த சாலைகளை 5 ஆண்டுகள் முடிந்த பிறகு அகலப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 51 மாதங்களில் 20 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 66,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் 3000 முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லமும் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு மாணவர், பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆகியோருக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். இந்தியாவில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம் பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என எண்ணத்தில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இன்றைய தினம் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, 5 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, ஊரக வளர்ச்சி முகாமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பி.கே.பிரபாகரன், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.