The Hon’ble Rural Development minister-Nalam kakum stalin(NKS)
செ.வெ.எண்:-08/2025
நாள்:-02.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை, சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் ஓம் சாந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் குத்துவிளக்கேற்றி, அங்கு அமைக்கப்பட்டிந்த அரங்குகளை பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை, சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(02.08.2025) தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் ஓம் சாந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் குத்துவிளக்கேற்றி, அங்கு அமைக்கப்பட்டிந்த அரங்குகளை பார்வையிட்டார். பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் வரும்முன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டு, மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என மருத்துவமனைக்கு சென்று மருந்து வாங்க செல்ல முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று மருந்துகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் செயல்பாடுகளை ஐ.நா, சபை பாராட்டியுள்ளது.
அதன்தொடர்ச்சியாக தற்போது, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்த முகாமிலேயே மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்க ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவத்துறையில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 என்ற திட்டங்களின் வரிசையில் தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.
இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 45 முகாம்கள் இன்றிலிருந்து தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது.
இந்த முகாம்களில், மருத்துவப் பயனாளிகளின் வருகை பதிவு, மேற்கொள்ளும் சிகிச்சைகள் என அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மருத்துவப் பயனாளிக்கும் அடுத்தடுத்து வழங்கப்படும் சிகிச்சைகள் பதிவு செய்யப்படுகின்றன. மருத்துவப் பயனாளிகளுக்கு உதவிட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களில் உயர் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என 200க்கம் மேற்பட்டோர் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் சுமார் 2000 மருத்துவப் பயனாளிகள் கலந்துகொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போல் இந்த முகாம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே வந்து சேவை மேற்கொள்ளப்படுகிறது. முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதயவியல், எலும்பியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம். குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், பிசியோதெரபி, கதிரியக்கவியல், நுரையீரல் மருத்துவம், கண் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், நீரிழிவு நோய், நரம்பியல் தொடர்பான அனைத்து வகை சிகிச்சைக்கான சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றிடும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதிய அத்தியாயமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.
முகாமில், 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தாட்கோ மூலம் 5 துாய்மை பணியாளர்களுக்கான நலவாரிய அட்டை ஆகியவற்றை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இம்முகாமில், மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மரு.சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநர் (பொறுப்பு -மருத்துவ நலப்பணிகள்) மரு.பி.உதயகுமார், மாவட்ட சுகாதார அலுவலர்(திண்டுக்கல்) மரு.ஆர்.செல்வக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர்(பழனி) மரு.மோ.அனிதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.