The Hon’ble Rural Development minister-Petition
செ.வெ.எண்:-81/2025
நாள்:-21.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் செட்டியபட்டி, காந்திகிராமம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், செட்டியபட்டி, காந்திகிராமம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் இன்று(21.06.2025) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், செட்டியபட்டி, காந்திகிராமம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், காந்திகிராமம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2023-2024கீழ் ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, ஆத்தூர் வட்டம், கீழக்கோட்டை கிராமம் செட்டியபட்டியில் 12 பயனாளிகளுக்கு ரூ.4,26,660/- மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாவும், காந்திகிராமத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.3,10,230/- மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாவும், தொப்பம்பட்டியில் 8 பயனாளிகளுக்கு ரூ.9,55,800/- மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.16.92 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதோடு, தேர்தல் நேரத்தில் சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
செட்டியபட்டி ஊராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. செட்டியபட்டியில் உள்ள பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை பெற மொத்தம் 1.60 கோடி மனுக்கள் பெறப்பட்டது. அதில் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாட்களை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் சுமார் 33 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் தற்போது விரிவுப்படுத்தப்பட்டு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி மாணவர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் வழங்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 10,000 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்றைய முகாமில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தட்சிணாமூர்த்தி, திரு.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.