The Hon’ble Rural Development Minister-Petition-Ambathurai
செ.வெ.எண்:-92/2025
நாள்:-24.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் வட்டம், அம்பாத்துரை ஊராட்சியில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 166 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம். அம்பாத்துரை ஊராட்சியில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் இன்று(24.06.2025) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அம்பாத்துரை ஊராட்சி குரும்பபட்டி, இராமநாதபுரம், பெருமாள்கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அம்பாத்துரை ஊராட்சியில் 166 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையச் செய்வதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம்.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை பெற மொத்தம் 1.60 கோடி மனுக்கள் பெறப்பட்டது. அதில் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாட்களை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண்கள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. இதில் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் சுமார் 33 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்றைய முகாமில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.