Close

Tourism-Palani to Tirupathi Bus

Publish Date : 11/07/2024

செ.வெ.எண்:-13/2024

நாள்:-05.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

பழனியில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணத்திற்கு இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாட்டு மக்களும் குறைந்த செலவில் தங்கி மலைகளின் இளவரசியான கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி, அமுதகம் உணவு விடுதி, நட்சத்திர ஏரியில் படகு குழாம் ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தி சுற்றுலா சேவைகளை அளித்து வருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட மக்களின் வேண்டுகோளிற்கிணங்க திண்டுக்கல் மாவட்டத்தின் ஆன்மீக சுற்றுலாத்தலமான பழனியில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல் வழியாக சனிக்கிழமை காலை ராணிப்பேட்டை சென்றடையும். ராணிப்பேட்டையில் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்களை தயார் செய்து கொண்டு, திருப்பதி சுற்றுலா பயணத்தை மேற்கொள்வார்கள். திருப்பதியில், தமிழ்நாடு சுற்றுலா கழகத்திற்கு தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கியுள்ள விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலமாக சுற்றுலா பயணிகள் தரிசனம் கொள்வார்கள்.

பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படும். மேலும் மதிய உணவுக்கு பின் திருச்சானூர் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இராணிப்பேட்டை ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகத்தில் இரவு உணவு வழங்கப்படும். அங்கிருந்து சுற்றுலா பயணிகள் பயணத்தை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் வழியாக பழனி வந்தடைவார்கள்.

இந்த சுற்றுலா பயணத்திற்கான கட்டணம் குழந்தைகளுக்கு ரூ.4,600, பெரியவர்களுக்கு ரூ.5,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை 3 வேளை உணவு மற்றும் சிறப்பு தரிசன கட்டணம் உள்ளிட்டவை இக்கட்டணத்திற்குள் அடங்கும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திருப்பதி சுற்றுலா பயணத்திட்டத்திற்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com என்ற இணையதள பக்கத்திலும் அல்லது நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.

திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்கள் (180042531111 (Toll free), 044-25333333 மற்றும் 044-25333444) வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.