Close

Ungaludan Stalin-inspection -Vadamadurai

Publish Date : 01/08/2025
.

செ.வெ.எண்:-107/2025

நாள்: 31.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

வடமதுரை ஊராட்சி ஒன்றியம், வேல்வார்கோட்டை கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியம், வேல்வார்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று(31.07.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆதார் பதிவு மையம் மற்றும் இ-சேவை மையம் செயல்பாடுகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பதிவு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 30.07.2025 வரை 66 முகாம்கள் நடத்தப்பட்டு, 18,096 மனுக்கள் பெறப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

வேல்வார்கோட்டை கிராமத்தில் இன்று நடைபெற்ற முகாமில் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக 430 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, 4 பயனாளிகளுக்கு சாதிச் சான்றிதழ், ஒரு பயனாளிக்கு வருமானச் சான்றிதழ், 3 பயனாளிகளுக்கு விதவை சான்றிதழ், 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் முழு புலம், 9 பயனாளிகளுக்கு குடிமை பொருள் பிரிவில் ஸ்மார்ட் குடும்ப அட்டையில் கைபேசி எண் மாற்றம், ஒரு பயனாளிக்கு முகவரி மாற்றம், ஒரு பயனாளிக்கு பெயர் நீக்கம், ஒரு பயனாளிக்கு பெயர் திருத்தம் என 19 கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், வேடசந்துார் வட்டாட்சியர் திரு.சேக் சிக்கந்தர் சுல்தான், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வீரகடம்பகோபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.