Kodaikanal E-Pass – Notification
செ.வெ.எண்:-01/2025
நாள்:-01.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை குறித்து – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ.பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோடைக்காலம் துவங்கப்பட உள்ளதால் கொடைக்கானல் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 01.04.2025 முதல் 30.06.2025 வரை வாரநாட்களில் 4000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கும் கொடைக்கானலுக்கு அனுமதிக்க மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்று பயணிக்குமாறும் மேலும் e.PASS பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு Local e.PASS பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 1800-425-0150 தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
அரசு பேருந்துகள், உள்ளூர் வாகனங்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற விலக்களிக்கப்படுகிறது. ஏற்கனவே அனுமதி பெறாத உள்ளுர் வாகனங்கள் புதியதாக உள்ளுர் e.PASS பெற கொடைக்கானல் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
மேலும், கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள், 5 லிட்டர்க்கு குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5 லிட்டர் குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் வைத்திருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20/- வீதம் பசுமை வரி விதிக்கப்படும்.
மேலும் கொடைக்கானலுக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகள் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகில் மற்றும் ரோஸ் கார்டன் அருகிலும் வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இ-பாஸ் (e-Pass) விண்ணப்பம் முழுவதும் வழங்கப்பட்டு தங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்படுமேயானால் தங்கள் விண்ணப்பம் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு அதே தேதியில் ஏதேனும் இடங்கள் காலியானால் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.