Election Meeting
செ.வெ.எண்:-114/2025
நாள்: 27.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 97.49% வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கபப்ட்ட கணக்கெடுப்பு படிவங்களில் 69.42% படிவங்கள் பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டுள்ளது. மீதமுள்ளவைகளை பெறுவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் எதிர்வரும் 04.12.2025 வரையில் நடைபெறவுள்ளது. மேற்படி படிவங்களை திரும்ப வழங்கிடுமாறு வாக்காளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. வாக்காளர்கள் இறுதி நாள் வரையில் காத்திருக்காமல் விரைவில் வழங்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. கணக்கெடுப்பு (Enumeration Form) படிவங்கள் திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் என்பதால் அனைத்து வாக்காளர்களும் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை தங்களது வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.