Close

The Honorable Minister of Rural Development inaugurated several completed projects worth ₹1.63 crore.

Publish Date : 09/03/2026
123

செ.வெ.எண்: 32/2026

நாள்: 08.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பாளையங்கோட்டை, சித்தையன்கோட்டை மற்றும் சித்தரேவு ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாளையங்கோட்டை, சித்தையன்கோட்டை சித்தரேவு ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(08.03.2026) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சி சி.எஸ்.ஜ நடுநிலைப்பள்ளியில் ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடம், பாளையங்கோட்டை ஊராட்சியில் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், சித்தையன்கோட்டை ஊராட்சி 11-வது வார்டில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், சித்தையன்கோட்டை 4-வது வார்டு, ஜான் தெருவில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடகமேடை, சித்தையன்கோட்டை 18-வது வார்டு, லட்சுமிபுரத்தில் ரூ.13.00 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டிடம், சித்தரேவு ஊராட்சி ஒட்டுப்பட்டி ஏ.எம்.ஏ துவக்கப்பள்ளியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடம் என மொத்தம் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ஊராட்சி சி.எஸ்.ஜ நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இப்பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இப்பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக 111கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற நோக்கில் செயலாற்றி வருகிறார்கள். தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்குவதற்காக “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 2024-25-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் வட்டத்தில் 4000 கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இந்த டைடல் பார்க் அமைக்கப்பட்டால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் மூலம் மக்களுக்காக மக்களைத் தேடி சென்று பல்வேறு திட்டங்ளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார்கள். தொடர்ந்து, கிராமப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பாதாள சாக்கடை வசதி, குடி தண்ணீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சித்தையன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி ஜெயமாலு, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.முருகன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.