DDAWO DEPT
செ.வெ.எண்: 07/2025
நாள்: 03.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ஓம் சாந்தி, CBSE மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 280 பயனாளிகளுக்கு ரூ.93,67,115 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஓம் சாந்தி, CBSE மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியினை இன்று (03.12.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 280 பயனாளிகளுக்கு ரூ.93,67,115 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, ஒவ்வொரு துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மீது தனிக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக ஒரு துறையினை உருவாக்கி அத்துறையினை தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை மற்ற குழந்தைகளுக்கு இணையாக சமுதாயத்தில் உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் மீது தனிக் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் முதன் முதலில் வீடுதோறும் சென்று மாற்றுத்திறன் கொண்டவர்களின் எண்ணிக்கையினை கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பஸ்பாஸ் வழங்குவதற்கு ஏதுவாக உலக வங்கியின் ஒத்துழைப்போடு ”தமிழ்நாட்டின் உரிமைகள்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமுதாயத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர் பெருமக்கள் முழு அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகிறார்கள். இதனை கருத்திற்கொண்டு, மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சங்கங்கள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்வினை மேம்படுத்துவதற்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு வரும் மாற்றுதிறன் கொண்டவர்களுக்கு ஏற்ற முறையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று வரும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாள் முழுவதையும் உங்களுக்கான நாளாக கொண்டாடப்பட வேண்டும்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற விழாவில், தலா ரூ.15,750 மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு ரூ.3,15,000 மதிப்பீட்டிலான மடக்குச் சக்கர நாற்காலியினையும், தலா ரூ.1,01,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு ரூ.5,05,000 மதிப்பீட்டிலான ரியோ போல்ட் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினையும், தலா ரூ.3,875 மதிப்பீட்டில் 35 பயனாளிகளுக்கு ரூ.1,35,625 மதிப்பீட்டிலான காதொலி கருவியினையும், தலா ரூ.14,490 மதிப்பீட்டில் 96 பயனாளிகளுக்கு ரூ.13,91,040 மதிப்பீட்டிலான செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளையும் (Smart Phones), தலா ரூ.6,359 மதிப்பீட்டில் 50 பயனாளிகளுக்கு ரூ.3,17,950 மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், தலா ரூ.9,500 மதிப்பீட்டில் 9 பயனாளிகளுக்கு ரூ.85,500 மதிப்பீட்டிலான மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புச் சக்கர நாற்காலிகளையும், தலா ரூ.1,01,800 மதிப்பீட்டில் 65 பயனாளிகளுக்கு ரூ.66,17,000 மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள் (Retrifitted Petrol Scooters) என மொத்தம் 280 பயனாளிகளுக்கு ரூ.93,67,115 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 26 நபர்களுக்கு பரிசுத் தொகையினையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சி.தங்கவேலு, சமூக நல அலுவலர் திருமதி சா.காலின்செல்வராணி அவர்கள் ஆகியோர் உட்பட ஆசிரியர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.