Election
செ.வெ.எண்:-89/2025
நாள்: 20.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 94% வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் (SVEEP) கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றது. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எளிமைப்படுத்தும் வகையிலும் எதிர் வரும் 22.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 23.11.2025 (ஞாயிறுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (SIR) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், 132 திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சிக்கு கட்டுப்பட்ட பாகங்களில் பெறப்பட்ட படிவங்களை மாநகராட்சி அலுவலகத்தில் BLO App Mapping மூலம் பதிவேற்றம் செய்வதை இன்று (20.11.2025) பார்வையிட்டு உரிய அறிவுரைகளை வழங்கினார். மேலும், சிறப்பு தீவிர திருத்தப்பணிகளின் தற்போதைய நிலை மற்றும் படிவங்கள் பதிவேற்றம் செய்வதை மேம்படுத்துவது குறித்தும் அரசியல் கட்சி பிரமுகர்களிடையே ஆலோசணைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீளப் பெறப்பட்ட படிவங்களை BLO App Mapping மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப உட்பட பலர் உடனிருந்தனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.