Tahdco Dindigul
செ.வெ.எண்:- 09/2025
நாள்:03.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
தொழில் முனைவோருக்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் தொடங்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது.
மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2024-25- ஆம் ஆண்டு சட்டபேரவை புதிய அறிவிப்பில் ருபாய் 50 கோடி மதிப்பீட்டில் இரண்டு தொழிற்பேட்டைகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் தற்போது முதலிபாளையம் தொழிற்பேட்டையில் அடிப்படை புனரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது மற்றும் ஈங்கூர் தொழிற்பேட்டையிலும் புனரமைப்புப்பணிகள் தொடங்கப்பட்டு 3 மாத காலத்தில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் குறு, சிறு மற்றும் பெரு தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையில் வாடகை மற்றும் குத்தகை முறையில் காலிமனையாகவோ, மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கூடங்களாகவோ, ஒற்றைமாடி/ பலமாடி தொழிற்கூடங்களாவோ அமைத்து அவர்களின் தேவைக்கேற்ப குறுகிய/நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்க அரசு தற்போது முன் வந்துள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பத்துடன் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள் தாங்கள் தொழில் செய்வதற்கு மேற்கண்ட ஏதேனும் முறையில் தொழிற்கூடங்களை பெற விண்ணப்பிக்கும் முன்பாக தள பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 04.04.2025 அன்று காலை 10 மணியளவில் ஈங்கூர் தொழிற்பேட்டையில் தள பார்வையிடலாம்.
மேலும் முதலிபாளையம் தொழிற்பேட்டைக்கு அழைத்து செல்ல துறையின் சார்பாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் தளத்தினை பார்வையிட்ட பிறகு அலுவலக தேவை படிவத்தின் மூலம் அவர்களின் விருப்பத்தை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கு பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற இணையதளத்தில் பதிவுசெய்யவும் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு கைபேசி எண் 9150277723 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.