Tamil Development Dept – Notification
செ.வெ.எண்:-30/2025
நாள்:-12.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஒரு வார காலத்திற்கு (17.12.2025 முதல் 26.12.2025 வரை) ஆட்சிமொழிச் சட்டவார விழா கொண்டாடப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
2019-2020-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படவேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணையின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17.12.2025 முதல் 26.12.2025 வரையிலான ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும்.
ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வுகளில், ஒரு நாள் நிகழ்வாக ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் 26.12.2025-அன்று காலை 10.30 மணியளவில் தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி, மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலத்திலிருந்து தொடங்கி மாநகராட்சி அலுவலகம் வரை வந்தடையவுள்ளது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைக்கவுள்ளார்.
மேலும், 17.12.2025 முதல் 19.12.2025 ஆகிய நாள்களுக்கு கணினித்தமிழ் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிச் சட்ட அரசாணை, மொழிப்பயிற்சி, கலைச்சொல்லாக்கம், வரைவுகள், குறிப்புகள் எழுதுதல் முதலிய தலைப்புகளில் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை கூட்ட அரங்கில் அரசுப் பணியாளர்களுக்குப் பயிற்சியும், 22.12.2025-அன்று தொழிலாளர் துறையினருடன் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திட வலியுறுத்தி தொழிலாளர் துறை அலுவலக சிறுகூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டமும், 24.12.2025-அன்று தமிழ் அமைப்புகள், நிர்வாகிகளுடன் இணைந்து திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டமும், 23.12.2025-அன்று முற்பகல் ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.